நெல்லை டிச, 15
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் சந்திப்பு பேருந்துநிலைய பகுதி மற்றும் ரயில் நிலையத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பயணி கள் அச்சத்துடன் செல்வதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதனையேற்று மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர வின் பேரில், மாநகர நல அலுவலர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சந்திப்பு பேருந்து நிலையம் பகுதிகள், ரயில் நிலைய காவலர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 23 நாய்களை வலை விரித்து பிடித்தனர்.
இந்த பணியானது மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.