சீர்காழி டிச, 12
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சென்னையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் “நான் முதல்வன்” என்ற மாபெரும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டம் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1.12.2022 முதல் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நான் முதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக சிறந்த பயிற்றுநர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் கோட்டாட்சியர்கள் , துணை ஆட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்குவித்தலும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வகுப்பானது அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.