தேனி டிச, 10
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பதவி உயர்வில் செல்ல மறுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டித்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிறுவனர் விமல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சார்லஸ் ராஜா, செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம் ஒரு மனு கொடுத்தனர் அதில், “வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி இயக்குனர் பதவி உயர்வை துறப்பதால் ஏற்படும் இழப்புகள் குறித்தும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளித்திருந்தோம். எங்களது மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்களை அறிய இயலவில்லை. பதவி உயர்வை துறந்ததன் மூலம் நேரடியாக 4 பேரின் பதவி உயர்வை தடுத்தும், ஒரு புதிய பணியிடம் மூலம் மறைமுகமாக ஒருவரின் வேலை வாய்ப்பை தடுத்தும் தங்களது சுயநலத்திற்காக மாவட்டத்தை விட்டு வெளியேற மறுக்கும் 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி புரியும் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது ” என்று கூறப்பட்டிருந்தது.