Spread the love

செங்கல்பட்டு அக், 25

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் மீனவர் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள், சமுதாயக்கூடம், படகுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்படாத வகையில் அங்கு தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தூண்டில் வளைவுக்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்தால் அப்பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து நெம்மேலி குப்பம் மீனவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் தூண்டில் வளைவு கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று காலை கடலில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மீன் வளத்துறை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *