நெல்லை அக், 17
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ம்தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஓர் உயிரை பாதுகாத்து உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகளை கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு சார்பாக உலக விபத்து காய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் ஷியாம் சுந்தர், ஆகியோர் முன்னிலை வகித்த னர். பேரணியில் செவிலியர் பயிற்சி மாணவிகள் பாரா மெடிக்கல் மாணவ- மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் தலைமையில் விபத்து காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரணியில் பங்கேற்றவர்கள் விபத்து தடுப்பு விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கியும், விபத்து தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்தார்கள். பேரணியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் ஐரின் அருணா எட்வின் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.