நெல்லை அக், 10
நெல்லை மாவட்ட வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மானூர் வட்டார தேவேந்திரகுல வேளாளர் விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுணன் மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
தாழையூத்து, தென்கலம், பல்லிக்கோட்டை மற்றும் நாஞ்சான்குளம் வருவாய் கிராமங்களில் உள்ள கீழத்தென்கலம், நல்லம்மாள்புரம், தென்கலம் புதூர், பிளியங்கொட்டாரம், நாஞ்சான்குளம், பள்ளமடை, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய ஊர்களில் சோலாார் மின்உற்பத்தி நிலையம் மற்றும் காற்றாலைகள் அமைப்பதற்கு எங்கள் பகுதியில் இருந்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் சோலார் மின்உற்பத்தி நிலையம், காற்றாலைகள் அமைந்தால் எங்கள் பகுதி விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும்.கடந்த ஒரு ஆண்டாக எங்கள் கிராம விவசாய நிலங்களில் சோலார் மின்உற்பத்தி நிலையம் மற்றும் காற்றாலைகள் அமைவதை தடை செய்ய கோரி கோரிக்கைவிடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக கடந்த 1 ம்தேதி தாழையூத்து ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
