நெல்லை டிச, 9
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் அங்கு கடை வைத்திருக்கும் சுமார் 500 கடைகளின் உரிமையாளர்களும் மாற்று கடைகள் அமைக்க இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி அதன் அருகே உள்ள மைதானம் மற்றும் பழைய போலீஸ் நிலையம் குடியிருப்பில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அந்த கடைகளுக்கு வியாபாரிகள் இடம்பெயர வேண்டும் என்றும், மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கட்டிடத்திற்கான பணிகளை தொடங்க வேண்டி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிவிப்பால் வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து இன்று காலை வியாபாரிகள் அனைவரும் காந்தி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாலமோன், பொதுச்செயலாளர் பெரியபெருமாள் மற்றும் நிர்வாகிகள் இசக்கி, தர்மர் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகைகள் உள்ளது. இந்த நேரத்தில் கடைகளை மூடிவிட்டு வேறு கடைக்கு செல்லவேண்டும் என்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும்.
எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பொங்கல் வரை ஒத்திவைக்க வேண்டும். அதன்பின்னர் நாங்களாகவே கடையை காலி செய்துவிடுவோம் என்று தெரிவித்தனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.