Spread the love

கோயம்புத்தூர் நவ, 15

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் பகுதிக்கு மின் மயானம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை அளித்து வந்தோம். இதன் பலனாக தமிழக முதலமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈச்சனாரி அருகில் நடைபெற்ற அரசு விழாவில் ஒத்தக்கால் மண்டபத்திற்கு மின் மயானம் அமைக்க அடிக்கல் நாட்டினார். மற்றும் பேரூராட்சி மன்றத்திலும் அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர். கட்டும் பணி தொடங்கும் என்று நினைத்திருந்த போது ஒரு சிலர் இந்த மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் அருகே வீட்டு மனை பிரிவுக்காக வேண்டுமென்றே சிலர் பேரூராட்சிக்கும், அரசுக்கும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் பணி செய்ய வரும் அரசு அதிகாரிகளை தடுத்து வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி எங்களது பகுதிக்கு மின் மயானம் அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *