Spread the love

தூத்துக்குடி அக், 27

அனல் மின்நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு முஸ்தபா தலைமை தாங்கினார்.

இப்போராட்டத்தில் மின்வாரியத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒப்பந்த பணியாளர்களை மின்வாரிய காலி பணியிடங்களில் பணியமர்த்துகின்ற வகையில் பணி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும், தூத்துக்குடி அனல் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை தற்காலிக மின்வாரிய ஊழியர் என்று அறிவிக்க வேண்டும், சம்பளம் நேரடியாக தமிழ்நாடு மின்வாரியத்தால் வழங்கப்பட வேண்டும், தமிழ்நாடு மின்வாரியத்தால் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை படி ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் திரளான ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களை பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அனல்மின்நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *