மதுரை அக், 26
மதுரை கீழக்குயில்குடியில் நவீன மருந்துகள் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்படையில் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நாட்டிலேயே அதிநவீன கருவிகள் மூலம் மருந்து பொருட்கள் சோதனை செய்யப்படும். சோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையிலான நவீன கருவிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 30 வகையான கருவிகளில் 10 வகையான கருவிகள் மதுரை வந்துள்ளன. இந்த கருவிகளுக்காக மட்டும் ரூ.6 கோடியே 70 லட்சம் செலவழிக்கப்படுகிறது.
இந்த ஆய்வகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகங்கள், மருந்து கடைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து மருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும்.
மேலும் 50 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்த ஆய்வகம் மதுரையில் செயல்பட தொடங்கினால், தென்மாவட்டங்களில் இருந்து மாதிரிகளை சோதனைக்கு அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை.
மேலும், தென் மாவட்டங்களில் சுமார் 50 சிறிய, பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இங்கும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மாதிரிகள் சேகரித்து விரைவில் முடிவுகளை தெரிவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், பொதுமக்களுக்கு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத தரமான மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.