நெல்லை அக், 23
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகராட்சியின் சார்பாக தூய்மையின் இரு வண்ணங்கள் என்ற தலைப்பில் குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வு கடந்த 17 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி மக்கும் குப்பைகள் பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பைகள் ஊதா நிற தொட்டியலும் பிரித்து போடுவது குறித்து வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது மாணவ – மாணவிகள் குப்பைகளை கொண்டு பூச்செண்டு, தலையாட்டி பொம்மை உள்பட பல்வேறு பொருட்களை உருவாக்கி இருந்தனர்.
மேலும் வி.கே.புரம் நகராட்சி சார்பாக தூய்மை பணியாளர்களும் குப்பைகளை கொண்டு பல்வேறு கலைப்பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதாவது குப்பைகளாக பெறப்பட்ட தெர்மாகோல், பெட்சீட், பஞ்சு, டியூப் லைட், பல்ப் போன்றவற்றை கொண்டு தூய்மை பணியாளர்கள் முயற்சியால் சுமார் 4 அடி உயரத்தில் யானை உருவத்தில் பொம்மை செய்யப்பட்டது. இது கண்களை கவரும் விதமாக இருப்பதால் நகராட்சி அலுவலகம் அருகேயே வைத்து, அதில் குப்பை பிரிப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பார்த்த அப்பகுதியினர் இதனை ஆர்வமுடன் பார்த்து செல்வது மட்டுமின்றி குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வும் அடைகின்றனர்