நெல்லை அக், 16
தீபாவளி பண்டிகை வரும் 24 ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இதன் காரணமாக, பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய வெடி பொருட்களை பொதுமக்கள் ரயிலில் எடுத்து செல்ல வாய்ப்புள்ளதால், அதற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துணை ஆய்வாளர்கள் சத்திய தாஸ் மற்றும் ஜான் ஆகியோர் தலைமையில், தலைமை காவலர் அந்தோணி முதல் நிலை பெண் காவலர் புஷ்பலீலா தனிப்பிரிவு முத்தமிழ் செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரயில் நிலையத்தில் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கொண்டு செல்கின்றனரா என கண்காணித்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
மேலும் ரயில்களில் வந்த பார்சல்களையும் மெட்டல் டிடெக்டர் மூலமாக காவல் துறையினர் சோதனை செய்தனர். ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததுடன், ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளை அழைத்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.