சேலம் அக், 15
அம்மாபேட்டை காமராஜ் நகர் காலனியை சேர்ந்தவர் அழகிரி. இவரது மகன் பிரசாந்த் வயது 35. பி.இ முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 9 ம்தேதி இரவு பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டையில் உள்ள உழவர் சந்தை அருகே சென்றார்.
அப்போதுமோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பிரசாந்த் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரசாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் திடீரென அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் பிரசாந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அவர்கள் தங்களது விருப்பத்தை சேலம் அரசு மருத்துவமனையில் டீன் வள்ளிசத்தியமூர்த்தியிடம் தெரிவித்தனர். நேற்று மாலை சேலம் அரசு மருத்துவமனையில் பிரசாந்தின் உடல் உறுப்புகளை எடுக்கும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். பின்னர் அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.