கோயம்புத்தூர் அக் 11
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா) மினி லாரியில் கோவைக்கு கடத்தி வரப்படுவதாக கருமத்தம்பட்டி தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் ஆய்வாளர் ராஜதுரை தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரை கண்டதும், லாரியை நிறுத்திவிட்டு, ஓட்டுனர் தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரை துரத்தி சென்று, மடக்கி பிடித்தனர். பின்னர் லாரியில் ஏறி சோதனையிட்டனர்.
அப்போது, மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஓட்டுனரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரனை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 120 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.