Spread the love

நெல்லை அக், 8

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள முக்கூடலைச்சேர்ந்த லதா என்பவரின் மகள் தேவி, பிரசவத்துக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நிலையில், லதாவின் அனுமதியுடன் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

அதன்பின் தேவிக்கு சிறுநீர் வெளியேறாமல் அவதிப்பட்டுள்ளார். நிலைமை மோசமானதை அடுத்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப்பலனின்றி மரணமடைந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக லதா, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே தனது மகள் பலியானதாகவும், தற்போது மகளின் பிஞ்சு குழந்தை உள்பட இரு குழந்தைகளுடன் சிரமப்படுவதாகக் கூறி சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த புகார் மனுவை விசாரித்த ஆணையம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளித்திருந்தால் தேவி மரணமடைந்திருக்க மாட்டார் எனவும், மருத்துவர்கள் அஜாக்கிரதையுடன் நடந்து கொண்டது, ஆவணங்களிலிருந்து நிரூபணமாகி உள்ளதாகக் கூறி, பலியான தேவியின் தாய் லதாவுக்கு நான்கு வாரங்களில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *