சேலம் அக், 4
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 365 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் மாவட்ட ஆட்சியர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மயில் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.