கரூர் அக், 1
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 149 மனுக்களை பெற்று கொண்டார். 12 விவசாயிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்து 21 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவது , துவரைக்கு பயிர்க்காப்பீடு வழங்குவது, ஏரியில் வண்டல் மண் எடுக்க கால நீட்டிப்பு செய்வது. கல்குவாாி ரத்து நெல்லுக்கான கடன் தொகை உயா்த்தி வழங்குவது, நுண்ணீர் பாசனத்தில் மானியம் வழங்குவது, மொஞ்சனூரில் சாலை வசதி, தென்னிலை மேற்கு பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை ரத்து செய்வது, காவிரி கூட்டு குடிநீர் வாரம் இருமுறை வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இதையடுத்து கோரிக்கைள் அனைத்தும் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மணிமேகலை, விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.