Spread the love

திண்டுக்கல் செப், 30

பழனி நகராட்சி பகுதிக்கு பாலாறு-பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் ஆகியவை குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணைகளுக்கு கொடைக்கானல் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்தாகிறது. இங்கு தேக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து குழாய்கள் மூலம் பழனிக்கு கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பாலாறு-பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் நிரம்பியது. குறிப்பாக கோடைகால நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் வழியே தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் பழனி நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது. இதற்கிடையே கோடைகால நீர்த்தேக்கத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் பாசி படர்ந்தது போன்று பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் தண்ணீர் மாசுபட்டுள்ளதோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பழனி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருவதால் நிறம் மாறி இருக்கலாம். ஆனால் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் 4 பில்டர்களின் மூலம் சுத்திகரிப்பு செய்து, தினமும் குளோரின் சோதனை செய்து வினியோகம் செய்யப்படுகிறது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *