மங்களூரு செப், 26
சர்வதேச விமான நிலையம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. துபாயில் இருந்து மங்களூருவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் இரவு மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த தனியார் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை நடத்தினர். அப்போது அந்த விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரிடம் அதிகாரிகள் தீவிரமான சோதனை நடத்தினர். அதில் அவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் அவர் கன்னடா மாவட்டம் பண்ட்வாலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் துபாயில் இருந்த மங்களூருவுக்கு தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான 306 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை விமான நிலைய காவல் துறையினர், சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து விமான நிலைய காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.