சென்னை செப், 26
தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதித்து பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் கோவை குனியமுத்தூா், ஒப்பணக்கார வீதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு பெட்ரோல் பங்குகளில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும், அவ்வாறு கேன், பாட்டில்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி, பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் போட வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் போடப்படும். வாகனங்கள் தவிர உதிரியாக எந்தவொரு கேன்களிலோ, பாட்டில்களிலோ சில்லரையாக பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.