Spread the love

கிருஷ்ணகிரி செப், 23

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் யஷ்வந்த்பூர்- ஓசூர் இடையேயான மின்சார ரயில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இதனால் நாள்தோறும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு பணிக்கு செல்வோர், வியாபாரிகள் அவதியடைந்தனர். தற்போது கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால் வழக்கம்போல் இந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து நேற்று யஷ்வந்த்பூர்- ஓசூர் ரயில் இயக்கம் மீண்டும் தொடங்கியது. யஷ்வந்த்பூரில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்ட ரெயில் 7.50 மணிக்கு ஓசூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது ஓசூர் ரயில் பயணிகள் சங்க செயலாளர் முத்துராமன் தலைமையில் உமா மகேஸ்வரன், சபரி உள்ளிட்ட நிர்வாகிகள் ரெயிலை அலங்கரித்து, பூஜைகள் செய்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து காலை 8.15 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு யஷ்வந்த்பூர் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது. அப்போது, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் ரயிலுக்கு மலர்தூவி வழியனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *