அரியலூர் செப், 22
திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் சரவணசுந்தர் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவில் பராமரிக்க வேண்டிய சாலை விபத்துகள் எண்ணிக்கை, அதில் ஏற்படும் உயிரிழப்புகள், காயங்கள், போக்குவரத்து விதி மீறிய குற்ற வழக்குகள், மாவட்டத்தில் நடக்கும் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள், அவற்றில் ஏற்படும் இழப்புகள், மீட்கப்பட்ட விவரங்கள், கொலை எண்ணிக்கை, அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது விவரங்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது, கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்றது, கள்ளச்சாராய விற்பனை, சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை வாங்கி விற்பது, அவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட, கைது செய்யப்பட்ட விவரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு வழக்கு எண்ணிக்கை விபரங்கள் குறித்து ஆய்வு செய்ததோடு அவற்றை பராமரிக்க தேவையான அறிவுகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
பின்னர் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி, சைபர் கிரைம் வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த, ஆய்வாளர் செங்குட்டுவன், துணை ஆய்வாளர்களா மணிகண்டன் மற்றும் முதல்நிலைப் பெண் காவலர்கள் வனிதா மற்றும் லதா ஆகியோருக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். முன்னதாக ஆயுதப்படை மைதானத்தில் சிறுவர்களுக்கான பூங்காவையும் திறந்து வைத்தார்.