லண்டன் செப், 20
இங்கிலாந்து நாட்டின் ராணி 2ம் எலிசபெத் கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13 ம்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ மத தேவாலயத்தில் ராணி அரச பாரம்பரிய முறைப்படி 2-ம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட லட்சக்கண்ககானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.