ஜெயங்கொண்டம் செப், 17
அரியலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலக்குடியிருப்பில் உள்ள மைய சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும் மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட காலை உணவை சாப்பிட்டு பார்த்தனர். இதையடுத்து செங்குந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி அந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சி, 10-வது வார்டில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் தாலுகாவில் உள்ள 9 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 464 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுமதிசிவகுமார், துணைத்தலைவர் கருணாநிதி, ஆணையர் சித்ரா, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.