திண்டுக்கல் செப், 15
காந்தி மார்க்கெட்டில் இருந்து வெளியூர்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் தினமும் 25 டன்களுக்கு மேல் காய்கறிகள் விற்பனை ஆகிறது. திருமண முகூர்த்த நாட்களில் காய்கறி விற்பனை மேலும் அதிகரித்து விடுகிறது. இதற்காக கிராமங்களில் இருந்து நள்ளிரவு முதலே காய்கறிகள் வரத்தொடங்கி விடும். அதிகாலை 4 மணி முதல் காய்கறி விற்பனை தொடங்கும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வியாபாரிக்கும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதைப் பார்த்த பிற கடைக்காரர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன்பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்களில் சிலரை, ஒரு கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் காய்கறி மூட்டைகளை இறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று காலை 7 மணி வரை மார்க்கெட்டில் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமை தூக்கும் தொழிலாளர்களை சமரசம் செய்தனர். அதன்பின்னர் காய்கறிகள் இறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இதற்கிடையே சுமை தூக்கும் தொழிலாளர்கள், வியாபாரி மோதல் சம்பவம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இதையொட்டி காந்தி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.