சென்னை செப், 15
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இந்த கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் இயல்பு நிலை திரும்பி மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
மேலும், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் பல மாதங்களாக வீட்டில் இருந்து பழகி விட்டனர். தற்போது தொடர்சியாக பள்ளிக்கு வருவது அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும், அதனால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும். சனிகிழமைகளில் கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். அரசின் உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
இந்த நிலையில், மாவட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கையின் படி, கொரோனா கால தொடர் விடுமுறைகள் காரணமாக மாணவர்கள் கற்றல் இழப்புகளை சந்தித்துள்ளனர். இதனால் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பாடத்திட்டங்களை முடிப்பதில் சிக்கல்கள் உள்ளது. இதற்கு உதவியாக இருக்கும் வகையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கி உள்ளதாகவும், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.