நெல்லை செப், 12
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டோம். அப்போது 30 முதல் 40 பேருக்கு மட்டுமே வேலை இருப்பதால் சுழற்சி முறையில் பணி வழங்குவதாக கூறுகிறார்கள்.ஆனால் சுழற்சி அடிப்படையில் கூட கடந்த 5 மாதங்களாக எங்கள் பகுதியை சேர்ந்த யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை ஏற்கனவே எங்கள் பகுதியில் விவசாயம் பொய்த்துவிட்டதால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தை நிரந்தரமாக தர வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்