பெங்களூரு செப், 11
கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டதால், இந்த ஆண்டு தசரா விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மைசூருவில் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் மைசூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த காவல்துறையினருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.