செங்கல்பட்டு செப், 10
மாமல்லபுரத்தில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 10 மீட்டர் தூர கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் சீறி எழும்பி வந்தன. நேற்று ராட்சத அலையால் கடல்நீர் முன்னோக்கி வந்ததால் அங்குள்ள கடற்கரை உணவகம், குடியிருப்பு பகுதிகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது. அங்கு கற்கள் கொட்டி கடல்நீர் வரத்தை தடுத்தும், கற்கள் தடுப்புகளை தாண்டி கடல்நீர் முன்னோக்கி வந்ததால் அந்த பகுதி மக்களும், மீனவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும் கடல் சீற்றத்தால் மணற்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்ட காரணத்தால் காலை நேரத்தில் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சிலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். கடல் சீற்றம் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கரைப்பகுதியில் படகு, வலை, போன்ற மீன்பிடி சாதனங்களை பாதுகாக்க முடியவில்லை என கவலை தெரிவிக்கும் மீனவர்கள், தமிழக அரசு மாமல்லபுரம் மீனவர் பகுதி கடற்கரை முழுவதும் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.