ஈரோடு செப், 5
ஈரோடு பஸ் நிலையம் அருகில் பூ சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சத்தியமங்கலம், சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்தாகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ரூ.500-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1,200-க்கு விற்பனையானது. இதைப்போல் மற்ற பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இது குறித்து ஈரோடு பஸ் நிலையத்தில் பூக்கடை வைத்திருக்கும் பூ வியாபாரி ஒருவர் கூறியதாவது:- மழை காரணமாக பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூ ஈரோட்டுக்கு ஒரு டன் முதல் விற்பனைக்கு வரும். ஆனால் நேற்று வெறும் 300 கிலோ மட்டுமே வந்தது. வரத்து குறைவு குறைவின் காரணமாகவும், ஓணம் பண்டிகை, முகூர்த்த நாட்கள் என தொடர்ந்து விசேஷ நாட்கள் வருவதாலும் பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்