சென்னை செப், 1
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. பூண்டி ஏரியில் மதகு, கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தபடி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் என்று ஏற்கனவே தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனால் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. தற்போது தொடர்ந்து பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த 2 ஏரிகளிலும் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.