Spread the love

கீழக்கரை ஆக, 24

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியினை சுமீத் கிரீன் என்னும் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனத்திடம் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 50 நாட்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.தனியார் நிறுவனத்தை கேட்டால் நகராட்சி நிர்வாகம் எங்களுக்கு தரவேண்டிய நிதி பாக்கியை தராமல் இழுத்தடிப்பதால் பணியாளர்களுக்கு எங்களால் ஊதியம் வழங்க முடியவில்லை என்கின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தை கேட்டால் தங்களிடம் போதிய நிதி இல்லாமல் நிதி நெருக்கடியில் தவிப்பதாக கூறுகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ மற்றும் சேர்மன், துணை சேர்மன், கவுன்சிலர்கள் என திமுகவை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தும் கீழக்கரை சுகாதார சீர்கேட்டினை களையாமல் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து வாட்சப் போன்ற சமூக வலை தளங்களில் சமூக ஆர்வலர்கள் பாசித் இல்யாஸ்,கிரௌன் ஹுசைன்,ஹமீது பைசல்,அன்சாரி,அபு உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்வதோடு தங்களின் கண்டனத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

தொகுதி எம்.எல்.ஏ உடனடியாக தலையிட்டு கேள்விக்குறியாகி வரும் கீழக்கரையின் சுகாதாரத்தை சீர் செய்யும் வகையில் போதிய நிதி ஆதாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர் பொதுமக்கள்.

தற்காலிகமாக கழிவு நீர் வாறுகாலை சுத்தம் செய்யும் பத்து பேர் மட்டும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் ஊர் முழுவதும் குப்பை மேடாகவும் துர்நாற்றமும் வீசி வருகின்றது.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *