செங்கல்பட்டு ஆக, 30
இந்திய தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆகியோர் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் வருகை தந்தனர்.
அவர்கள் அங்குள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் மாவட்ட, தாலுகா அளவில் தேர்தல் பணியாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் எந்த அளவில் நடைபெறுகிறது என்று ஆலோசனை நடத்தினர். அப்போது இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபடும்போது வாக்காளர்களின் முழு ஒத்துழைப்பு பற்றி கேட்டறிந்தனர்.
அப்போது அலுவலர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து, அவர்களிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சஜ்ஜீவனா, மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிகழக விடுதி மேலாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்