டெல்லி ஆக, 27
பதவி காலம் முடிந்த பின்னரும், புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை உச்ச நீதிமன்றம் நீக்கியது. அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்தது.
இதனிடையே, இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3ம் நபர் தலையீடு இருப்பதாக கூறி அதன் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா நீக்கியது. மேலும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவதற்கான உரிமத்தையும் பிபா தற்காலிகமாக நீக்கியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த நிர்வாக குழு கலைக்கப்பட்டதையடுத்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை பிபா நீக்கியது. 3-ம் நபர் தலையீடு நீங்கியதையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தடை நீக்கப்படுவதாக பிபா அறிவித்துள்ளது. இதன் மூலம், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியா நடத்தப்பட உள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கால்பந்து கூட்டமைப்பு எடுத்து வருகிறது.
மேலும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.