அரியலூர் பிப், 23
உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அங்கன்வாடி மையம் ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொது மக்களை சந்தித்து அவர்கள் குறையை கேட்டறிந்தார்.
இதன் ஒரு பகுதியாக நல்லம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்ட போது, காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டு அறிந்தார். அப்போது காலை உணவாக உப்புமா தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து “எனக்கு கொஞ்சம் தாருங்கள்” என்று தட்டில் வாங்கி உப்புமாவை சாப்பிட்ட ஆட்சியர், இது உப்புமாவா ?பொங்கலா ?என்ற சந்தேகத்தை கிளப்பினார். அதற்கு சமையலர்கள் விளக்கம் அளித்தனர். ருசி என்னமோ நன்றாகத்தான் உள்ளது. ஆனால் பொங்கலைப் போல அரிசி எல்லாம் உள்ளதே ! என்று கேட்ட மாவட்ட ஆட்சியர் இனி அந்தந்த உணவுப் பொருட்களைக் கொண்டு அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.