ஆகஸ்ட், 22
இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், 94வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம்பிடித்தது.
மேலும் சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம், ஒரு சில காரணங்களால் சர்ச்சைகளில் சிக்கியது. படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கேற்ப படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனிடையே நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் 12வது பீஜிங் திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது படத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பலர் கண்ணீர் சிந்தியுள்ளனர். அதோடு சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோரது நடிப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.