ஈரோடு ஆக, 30
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பைகளை அகற்றும் பணி என மாஸ் கிளினீங் என்ற பெயரில் அவ்வப்போது நடைபெற்றது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பக்குளம் வீதி, காமராஜர் வீதியில் மழை பெய்யும் போது கழிவு நீர் ஒடை நிரம்பி குடியிருப்பு களுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும், இதற்கு கழிவு நீர் ஓடைகளை தூர்வாரிட அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின்பேரில் தெப்பக்குளம் வீதி, காமராஜர் வீதியில் உள்ள பெரிய ஓடை மாஸ் கிளினீங் முறையில் சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கியது.
இதில் 80-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், ஜே.சி.பி. வாகனம் உட்பட 6 வாகனங்களில் சாக்கடையை தூர்வாரி, கழிவுகளை அகற்றினர். தற்போது வரை 250 டன் சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டதாகவும், இந்த கழிவுகள் முனிசிபல் காலனியில் உள்ள தாழ்வான பகுதி யில் கொட்டப்பட்டு சமன் படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.