தேனி ஜூலை, 8
கோவை சரக காவல் துறை துணை தலைவர் விஜயகுமார், நேற்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட காவல் துறை துணை தலைவர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், தேனி ரத்னம் நகரில் விஜயகுமார் உடலுக்கு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.