புதுடெல்லி ஆகஸ்ட், 15
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றுவது இது 9வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
அதன் பின்னர் சாரே ஜஹான் சே அச்சா பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். அதன் பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
தனது உரையில் விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி தமிழகத்தின் வேலு நாச்சியார், பாரதியார் பெயர்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.
சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டுள்ளனர். சுதந்திர தின விழாவை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.