நாமக்கல் ஆகஸ்ட், 12
பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் அருகே உள்ள ஜேடர்பாளையத்தில் 80 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த ஏழை மக்களின் குடிசைகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து தரைமட்டம் செய்யப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுகுடி அமர்வு செய்யும் பொருட்டு, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பரமத்திவேலூர் வட்டக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்குழு செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, வேலுசாமி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.