செங்கல்பட்டு ஜன, 4
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். முன்னதாக கடற்கரை கோயில் நுழைவுவாயில் பகுதியில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், அவருக்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.
சுற்றுலா பயணிகள் யாரையும் தடுத்து நிறுத்தாமல் ராம்நாத் கோவிந்த், மக்களோடு மக்களாக புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார். அவரை அடையாளம் கண்ட வடமாநில சுற்றுலா பயணிகள் சிலர் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். அவர்களை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாமல்லபுரம் காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், ஆய்வாளர் ருக்மாங்கதன், வருவாய்த்துறை மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.