கரூர் ஆகஸ்ட், 10
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கரூர் காமராஜ் நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வடிகால் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் அப்பகுதிகளில் துணிக்கடைகள் அதிகமாக இருப்பதால், மினி லாரிகளில் கடைகளுக்கு தேவையான பொருட்கள் ஏற்றி சென்று வருகின்றனர். இந்த வண்டிகளும் அந்த சாலையில் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கூட எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைகின்றனர். இதனால் காமராஜ்நகர் பகுதியில் நடைபெறும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.