திருவாரூர் ஆகஸ்ட், 9
திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தேசிய கொடிகள் தைத்து தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய நகராட்சிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 50 ஆயிரத்து 633 தேசிய கொடிகள் தைக்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் 35 மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், நகராட்சி ஆணையரிடம் நேற்று வழங்கினார். இதில் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர், நகராட்சி மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.