Spread the love

நெல்லை ஆகஸ்ட், 9

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆன்-லைன் ரம்மியை தடை செய்ய கோரி மனு அளித்தனர்.

முன்னதாக அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சாலையில் அமர்ந்து சீட்டு விளையாடி கோஷங்களை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கோரிக்கை மனு அளிக்க சென்றனர்.

தமிழ் தேச தன்னுரிமை கட்சி நிறுவன தலைவர் வியனரசு தலைமையில் பொது மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கிய குவாரிகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே விதி மீறி செயல்பட்ட குவாரிகள் மீண்டும் இயங்க தடை விதிக்க வேண்டும்.

அதே நேரத்தில் குவாரிகளை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். கனிமவள கொள்ளைைய தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் தேவேந்திரன் தலைமையில் பொது மக்கள் திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அதில், நெல்லை மாவட்டத்தில் இந்து காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களால் 8,10-ம் வகுப்புகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. எனவே அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி மேல்படிப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *