சென்னை டிச 3,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் மேத்யூ ஜோல்லிக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். மேலும் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவரிடம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கொண்ட 35 பாக்கெட்டுகள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் அந்த சிகரெட் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கமும், வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.