ஈரோடு ஆகஸ்ட், 5
ஈரோட்டில் நேற்று பெய்த பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோட்டில் மழை ஈரோட்டில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. காலை 8.30 மணி அளவில் லேசான சாரல் மழை விழுந்தது. சூரிய ஒளி தெரியவில்லை. காலை 9 மணிக்கு சிறு துளிகளாக தொடங்கிய மழை பெரு மழையாக மாறியது. பகல் 11 மணி வரை இந்த மழை நீடித்தது. மழை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திலேயே மாநகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனைத் தொடர்ந்து, பெருந்துறை ரோடு, சென்னிமலை ரோடு பகுதிகளில் சாலைகள் காட்டாறுபோல மாறின. சம்பத்நகர் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் ரோட்டில் மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள சுடுகாடு பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாக்கடை கால்வாயில் வெள்ளம் பீறிட்டு பாய்ந்தது.
இதுபோல் பன்னீர்செல்வம் பூங்கா, கடை வீதி, ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன்கோவில் பகுதி என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரெயில்வே நுழைவுபாலங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிப்பு பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் நிரம்பி ஓடியது. மதியம் வரை லேசான தூறலுடன் இருந்த மழை விட்டு விட்டு மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக நேற்று குளிர் காற்று வீசியது. அதே நேரம் சாலையோர வியாபாரிகள், அன்றாட கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க..
http://www.vanakambharatham24x7news.in