நெல்லை ஆகஸ்ட், 4
பாளையங்கோட்டை அருகே உள்ள பெருமாள்புரம் ஏ.ஆர். லைன் தாமஸ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண ஜோதிகுமார் (வயது38). தாழையூத்து போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வரும் இவர் தனது வீட்டில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள நாய் ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த 18-ம் தேதியன்று அந்த நாய் மாயமானது. இது தொடர்பாக கிருஷ்ணஜோதி குமார் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, துணை ஆய்வாளர் நயினார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக நெல்லை மாநகரம் முழுவதும் சுமார் 80 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நாயை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கேமரா காட்சிகளை கொண்டு அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் நாவலடியூரை சேர்ந்த முத்துராஜ் (31), சந்திப்பு கருப்பன்துறையைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட நாயை மீட்டனர்.
மீட்கப்பட்ட நாயை நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை ஆணையர் சீனிவாசன், மேலப்பாளையம் சரக உதவி ஆணையர் சதிஷ்குமார் மற்றும் பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் உரியவரிடம் ஒப்படைத்தனர்.