செங்கல்பட்டு அக், 5
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்கு தேவையான பழங்கள், பொரி, பூசணிக்காய், பூ, வாழை இலை, வாழைக்கன்றுகள், தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக கூடுவாஞ்சேரி பஜார் பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட் பகுதிக்கு வருகை தந்தனர்.
மேலும் மார்க்கெட் பகுதியில் 1 கிலோ சாமந்திப்பூ ரூ.320க்கும், ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.780க்கும் விற்பனை செய்யப்பட்டதால் பூ வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பண்டிகை நாட்களில் வியாபாரிகள் செயற்கையாக இது போன்ற பூக்களின் விலைகளை அதிகரித்து விற்கின்றனர் என்று புலம்பியப்படியே பூக்களை வாங்கி சென்றனர்.
இதேபோல உதிரி ரோஜா, முல்லை போன்ற பூக்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. சாதாரண நாட்களில் 3 வாழை இலை ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜை பண்டிகை என்பதால் 3 வாழை இலை ரூ.30க்கு விற்பனை செய்தனர். இதே போல ஆப்பிள், சாத்துக்குடி, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களில் விலைகளும் அதிகமாக இருந்தது.