நெல்லை செப், 30
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தா ரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மைசூரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தற்போது கட்டுப்பாடுகள் விலகிக் கொள்ளப்பட்டு கடந்த 26ம் தேதி பக்தர்கள் பங்கேற்கும் விதமாக தசரா திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தசரா திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி உட்பட ஏராளமான மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து கோவிலுக்கு வருவார்கள்.அவர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக விநாயகர், முருகன், சிவன், பார்வதி, மீனாட்சி, காளி, சுடலைமாடன் உள்ளிட்ட தெய்வ வேடங்களிலும், காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து கொண்டு ஊர் ஊராக சென்று பொது மக்களிடம் காணிக்கை பெற்று பின்னர் தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தின் போது குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் ஏராளமான இடங்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை தொடங்கியுள்ளனர். நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் நேற்று ஒரு குழுவினர் விரதத்தை தொடங்கி மாலை அணிந்துள்ளனர். அவர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து இன்று முதல் ஒரு ஊராக சென்று காணிக்கை பெற தொடங்கியுள்ளனர்.