திண்டுக்கல் செப், 21
வேடசந்தூர் அருகே உள்ள ஈ.சித்தூர் ஊராட்சி சித்தூர் காலனி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் வழங்கும் மின்மோட்டார் பழுதானது. ஆனால் அந்த மோட்டாரை பழுது நீக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இ்ந்நிலையில் நேற்று காலை சித்தூர் காலனி பொதுமக்கள் எரியோடு-வேடசந்தூர் சாலையில் தண்ணீர்பந்தம்பட்டிக்கு வந்து காலிக்குடங்களுடன் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் மின் மோட்டாரை உடனடியாக பழுது நீக்கி சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி சமரசம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.